அருப்புக்கோட்டை: தனியார் மருத்துவமனை மருத்துவர் கரோனாவுக்குப் பலி
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவருமாகிய சாகுல் ஹமீது மன்சூர் என்பவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 22 நாட்கள் சிகிச்சையிலிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மருத்துவமனையை நடத்தி வந்தவர் சாகுல் ஹமீது மன்சூர். இவர் கரோனா காலத்திற்கு முன்பிருந்தே பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததால் அப்பகுதியினரிடையே இவர் நன்கு அறியப்பட்டவர்.
இந்நிலையில், இவருக்குக் கடந்த மே மாதம் 8ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தன் வீட்டிலேயே சுமார் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு அறிகுறிகள் தீவிரமானதால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் (மீனாட்சி மிஷன்) சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதில் சுமார் 22 நாட்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனை மருத்துவரே கரோனாவுக்கு பலியானதால் இத்தகவல் அருப்புக்கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.