சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை ஒட்டி , மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக தொண்டர்கள் அனைவரும் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் அமைதியாக வீடுகளிலேயே கொண்டாடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, மெரினாவில் உள்ள குருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் விதம், 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
36 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள்கள், நிவாரண உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக அண்ணாவின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற. பேரவை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி நினைவிடத்தை தொடர்ந்து கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.