உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் இரவில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மின்னல் இடியுடன் கூடிய பலத்த கன மழை பெய்தது. கிராம பகுதிகளில் பெ்யத கனமழையால் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், நீர்நிலைகளில் ஓரளவுக்கு நிரம்பியுள்ளது .
இந்நிலையில், உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி வாலாந்தூர், செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தனர். கடந்த 90 நாள்களுக்கு பிறகு நெற் பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சல் அடைந்து இன்னும் 15 நாள்களில் நெல் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமைடந்துள்ளது.
தற்போது கரோனா முழு பொதுமுடக்கம் என்பதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை நேரத்தில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . இதனால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.