கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் தொடர்மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது ஞாயிற்றுக்கிழமை காலை 2,534 கன அடியாக தண்ணீர் வரத்து வந்தது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதை முன்னிட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை கடந்த மூன்று நாள்களாக பெய்து வருகிறது.
சனிக்கிழமை இரவு பெய்த தொடர் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அணைக்கு விநாடிக்கு 2,534 கனஅடி தண்ணீர் வந்தது.
சனிக்கிழமை நீர்வரத்து வினடிக்கு 909 கனஅடியாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 1, 675 கன அடி தண்ணீர் கூடுதலாக அதிகரித்து விநாடிக்கு 2,534 கன அடியாக வந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் கம்பம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், சுரங்கனாறு, சுருளியாறு, சுருளி அருவி, வரட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு, முல்லைப் பெரியாற்றில் இணைந்து செல்கிறது. இதனால் முல்லை பெரிய ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வைகை அணைக்கு செல்கிறது.
அணை நிலவரம்:
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.0 அடி உயரமாகவும், அணைக்குள் நீர் இருப்பு 4, 959 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,534 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு அணையிலிருந்து, நீர் வெளியேற்றம் 900 கன அடியாகவும் இருந்தது.
லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகள் மூலம் 42, 41 என மொத்தம், 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.