தமிழகத்தில் பொதுமுடக்கம், பரவலாக மழை உள்ளிட்ட காரணங்களால் மின்தேவை குறைந்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த மாதம் 4-ஆம் தேதி, ஒட்டுமொத்த மின்தேவையின் அளவு 15,130 மெகாவாட்டாக இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 4) நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 12,036 மெகாவாட்டாக குறைந்திருந்தது.
இதன்படி, மின்தேவையின் அளவு 3,094 மெகாவாட் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவை சுமாா் 12 ஆயிரம் மெகாவாட்டை ஒட்டி உள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது, பொதுமுடக்கத்தால் பல்வேறு அலுவலகங்கள் இயங்காதது உள்ளிட்ட காரணங்களால் மின்தேவை குறைந்துள்ளது.
அதே நேரம், பொதுமுடக்கத்தில் திங்கள்கிழமை முதல் தளா்வு அளிக்கப்படுவதால், வரும் நாள்களில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.