தம்மம்பட்டி: தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து செந்நீராக கரை புரண்டு பாய்ந்தோடியது.
சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் செந்நீர்.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, தெடாவூர் கெங்கவல்லி, வீரகனூர், கவர் பனை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை 5 மணியிலிருந்து இரவு வரை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விவசாய வயல்களில் மழை நீர் நன்கு தேங்கி நின்றது. பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பெருக்கெடுத்து ஒடும் மழை நீர்
அருகே உள்ள கொல்லிமலையில் உள்ள குண்டனி, வேலிக்காடு, கீரைக்காடு என 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களிலும் இரவு முழுதும் பலத்த மழை பெய்ததையடுத்து, மலையடிவாரத்தில் வறட்டாற்று பிறப்பிடமான எழுத்துக்கல்லில் மழை நீர் பெருக்கெடுத்தது.
மேலும், பெரியாற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்தது. இரு ஆறுகளும் இணைந்து தம்மம்பட்டியில் உருவாகும் சுவேத நதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்து செந்நீராக கரை புரண்டு பாய்ந்தோடியது.
இப்பகுதி மக்கள் இதனை ஆர்வமாக பார்த்து சென்றனர்.