காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் 113 -ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் கொண்டாடப்பட்டது.
கம்பன் கழகத் தலைவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் கம்பன்அடிப்பொடியின் கம்ப சேவைகளைச் சொல்லித் தொடக்கவுரையாற்றினார். இதனைத் தொடர்ந்து முனைவர் மு. பழனியப்பன் கம்பன் அடிப்பொடியாரின் கல்வெட்டறிவு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நேர்த்தி, கம்பனை அவர் வழிபடும் தெய்வமாக கொண்ட பாங்கு பற்றிப் பேசினார்.
கரோனா தீநுண்மி பெருந்தொற்று நோய் தந்த மன அழுத்தங்களில் இருந்து விடுபட தன்னம்பிக்கை தரும் உரையை ‘‘இருப்பைக் காட்டுகங்கள்” என்ற தலைப்பில் புதுக்கோட்டை கவி. முருகபாரதி உரையாற்றினார். தொடர்ந்து முனைவர் சோ. சேதுபதி கம்பன் அடிப்பொடியாரின் நுண்ணறிவு, அவரின் இலக்கிய ஞானம் பற்றிப் பேசினார்.
தொடர்ந்து கம்பன் அடிப்பொடியாரின் நினைவுகளைப் பகிரும் கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றன இணையத்தில் வெளியிடப்பட்டன.
கம்பன் அடிப்பொடியாரின் கனவான, காரைக்குடியில் கம்பன் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அமைய உலகோர் யாவரும் உதவிட மனமுவந்து கம்பன் கழகம் வேண்டுகின்றது. இதற்கான பூர்வாங்க வேலைகளும் இன்றிலிருந்து தொடங்குவது என கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் முதலான நிர்வாகிகள் முடிவெடுத்து இணைய வழியில் கம்பன் ஆர்வலர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.