தடுப்பூசி போடாவிட்டால் கோயம்பேடு சந்தைக்கு அனுமதி இல்லை என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உள்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த 10 நாள்களில் கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து வியாபாரிகளுக்கும் கரோனா தடுப்பூசியில் முன்னிரிமை அளிக்கப்படும்.
மே மாதத்தில் மட்டும் கோயம்பேட்டில் உள்ள 9,003 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வை இன்றிமையாதத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றார்.