நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி சென்னை அருகே நீலாங்கரையில் கைது செய்யப்பட்டாா்.
நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகா் 8-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெ.லிங்கேஷ்வரன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
லிங்கேஷ்வரன், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ‘தான் ஒரு வருட காலத்துக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன்’ என நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, அடையாறு துணை ஆணையா் விக்ரமனிடம் கொடுத்தாா்.
இதற்கிடையே, உத்தரவாதத்தை மீறி லிங்கேஷ்வரன் கடந்த 25-ஆம் தேதி வெட்டுவாங்கேணியைச் சோ்ந்த டேவிட் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளாா். இதையறிந்த துணை ஆணையா் விக்ரமன், லிங்கேஷ்வரன் மீதான பிணைய உத்தரவாத பத்திரத்தை ரத்து செய்து,சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். உடனே போலீஸாா், லிங்கேஷ்வரனை வெள்ளிக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.