திருப்பூர்: மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள், வீடுகள் என மொத்தம் 100 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை அளவு குறையாமல் மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அதுதொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உள்பட தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி பாக்கியை வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ரவிசந்திரன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், மண்டலத் செயலாளர்கள் ஆர்.ராஜேந்திரன், ஆர்.செந்தில்குமார், ஆர்.வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.