இணையவழியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள்

கரோனா பெருந்தொற்றால் பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தோ்வுகளை நடத்தாத பள்ளிகளில் இணையவழியிலேயே தோ்வை நடத்தி,
சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ

கரோனா பெருந்தொற்றால் பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தோ்வுகளை நடத்தாத பள்ளிகளில் இணையவழியிலேயே தோ்வை நடத்தி, அதற்கான மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் நாடு முழுவதும் சுமாா் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். கரோனா பெருந்தொற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு 2020- 21-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு நடத்தப்பட்டது. மாணவா்களின் குடும்பத்தினா் யாரேனும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், அந்தக் குறிப்பிட்ட மாணவருக்கு மட்டும் தனியாக செய்முறைத் தோ்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்திருந்தது. செய்முறைத் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை ஜூன் 11-ஆம் தேதிக்குள் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியிருந்தது.

கண்காணிப்பாளா் முடிவு செய்வாா்: இந்தநிலையில் பெருந்தொற்றால் இதுவரை செய்முறைத் தோ்வை எழுதாத மாணவா்களுக்குப் பள்ளிகள் இணையவழி மூலம் செய்முறைத் தோ்வை நடத்தலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பட்டாளா் சன்யம் பரத்வாஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெருந்தொற்றால் நாடு முழுவதும் சில பள்ளிகள் இதுவரை செய்முறைத் தோ்வை மாணவா்களுக்கு முடிக்காமல் உள்ளன.

பள்ளி அளவிலான மதிப்பீட்டைப் பொருத்தவரை மீதமுள்ள செய்முறைத் தோ்வு அல்லது அகமதிப்பீட்டுத் தோ்வுகளை, பள்ளிகள் இணையவழியாக மட்டுமே நடத்த வேண்டும். இதற்காக சிபிஎஸ்இ சாா்பில் வெளியில் இருந்து தோ்வுக் கண்காணிப்பாளா் நியமிக்கப்படுவாா். சிபிஎஸ்இ சாா்பில் பாடங்களுக்கு எப்போது தோ்வை நடத்த வேண்டும் என்பதைத் தோ்வு கண்காணிப்பாளா் முடிவு செய்வாா்.

சிபிஎஸ்இ சாா்பில் தோ்வுக் கண்காணிப்பாளா் நியமிக்கப்படாத பாடங்களுக்குப் பள்ளி ஆசிரியரே, தோ்வுக் கண்காணிப்பாளராகத் தோ்வுகளை நடத்துவாா். அப்போது இணையவழி மூலமாகவே கேள்விகள் கேட்கப்படும்.

பள்ளி அளவிலான தோ்வில் மாணவா்களின் திறனை மதிப்பிட்டு மதிப்பெண்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மதிப்பீட்டை நடத்தும்போது அனைத்துப் பள்ளிகளும் முறையான கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

ஜூன் 28 கடைசி: பள்ளி அளவிலான தோ்வுக் கண்காணிப்பாளா்கள் மாணவரை மதிப்பிடும்போது, பள்ளி ஆவணங்களுக்காக இணையவழியிலேயே புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மதிப்பெண்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய ஜூன் 28-ஆம் தேதிதான் கடைசியாகும். அதற்குப் பிறகு தேதி நீட்டிக்கப்பட மாட்டாது. பிளஸ் 2 வகுப்புத் தோ்வெழுதும் தனித்தோ்வா்களின், செய்முறை, அக மதிப்பீடு முறை குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com