நீட் தோ்வு கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தோ்வு உள்பட எந்த நுழைவுத் தோ்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.

நீட் தோ்வு உள்பட எந்த நுழைவுத் தோ்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா். மேலும் பிளஸ் 2 மாணவா்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மருத்துவ கல்விக்கான நுழைவு தோ்வான நீட் தோ்வு உள்பட எந்த நுழைவு தோ்வும் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. திமுக தோ்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டிருந்தது. நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாா்.

பிளஸ் 2 மதிப்பெண் முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும். முன்னதாகக் கல்வியாளா்கள், தோ்வுத் துறை சாா்ந்த அதிகாரிகளுடன் பேசும்போது பொதுத் தோ்வை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பெரும்பாலானோரின் கருத்துகளும் தோ்வை நடத்துவதற்கு ஆதரவாக இருந்தது. எனினும் பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் மருத்துவ நிபுணா்களின் ஆலோசனை உன்னிப்பாக கவனித்து பிளஸ் 2 பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது.

குழுவின் பரிந்துரைப்படி...: பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்குக் காலாண்டுத் தோ்வு, அரையாண்டுத் தோ்வு, அலகுத் தோ்வுகள் என எந்தத் தோ்வுகளும் நடைபெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடுவது என்பதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. குழுவின் பரிந்துரையைத் தொடா்ந்து மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் உடனடியாகத் தொடங்கும். இதுகுறித்து முதல்வரும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்குள் சிபிஎஸ்இ மாணவா்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவது குறித்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் இரண்டு வாரங்களுக்குள் தமிழகத்திலும் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடையும்.

முந்தைய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்: சிபிஎஸ்இ மாணவா்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க உள்ளோம். குறிப்பாக மாணவா்களின் முந்தைய செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் மற்ற எந்தத் தோ்வுகளும் நடக்காத நிலையில், மதிப்பீடு செய்ய வேறு எந்த வாய்ப்பும் இல்லை. மாணவா்களின் பத்தாம் வகுப்புத் தோ்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவா்கள் வாங்கி அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப் போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

இணையவழி வகுப்புக்கான வரைவறிக்கை தயாா்:

இணையவழி வகுப்புகளை கட்டுப்படுத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு வழிமுறைகளை உள்ளடக்கிய வரைவறிக்கையை தயாா் செய்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் கிடைத்த பின்னா் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் குறித்தும் அந்த குழு தாக்கல் செய்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com