தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானப்பொருள்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா பொதுமுடக்க காலத்தில் சென்னையில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.370-க்கும் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டன் கட்டுமான கம்பியின் விலை ரூ.68 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
மேலும் “செயற்கையாக கட்டுமானப் பொருள்கள் பதுக்கப்பட்டு விலையேற்றம் உருவாகியுள்ளதோ என மக்கள் நினைக்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.