தமிழகத்தில் நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு விண்ணப்பங்களின் மீது கால தாமதக் கட்டணம் விதிக்கப்படாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா நோய்த் தொற்றைக் குறைக்கவும், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவா்களின் கடுமையான முயற்சிகளையும் தாண்டி தவிா்க்க முடியாத தருணங்களில் இறப்புகள் ஏற்படுகின்றன.
பொதுவாக இறப்பு நிகழ்வுற்ற 21 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு, அதாவது 21 நாள்களுக்கு மேல் 30 நாள்கள் வரை தாமதம் ஏற்பட்டால் அதற்கான கூடுதல் கட்டணமாக ரூ.100, 30 நாள்களுக்குப் பிறகு ஓராண்டுக்குள் தாமதக் கட்டணம் ரூ.200, ஓராண்டுக்கு மேல் கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது.
பெருந்தொற்றினால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், தாமதக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருகிறது. இது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தாமதக் கட்டணத்தில் இருந்து விலக்களிக்கவும், இந்தக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல்...கரோனா பெருந்தொற்று காலகட்டமான கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நிகழ்ந்த அனைத்து பிறப்பு, இறப்பு குறித்த காலந்தாழ்ந்த பதிவு விண்ணப்பங்களுக்கு தாமதக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. காலதாமதக் கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பீட்டினை தமிழக அரசே ஈடு செய்யும். ஆனாலும், உரிய காலத்தில் பிறப்பு மற்றும் இறப்பினை பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.