சென்னை: சிமெண்ட் விலை உயா்ந்திருப்பது நியாயமற்றது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தமிழகத்தில் சிமெண்ட் விலை கடந்த சில நாள்களில் மூட்டை ரூ.370-லிருந்து ரூ.520-ஆக அதிகரித்திருக்கிறது. இது நியாயமற்றது. இது கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாகப் பாதிக்கும்.
ஊரடங்கு காரணமாகவே சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்திருப்பதாக கூறப்படுவது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைபடவில்லை; தேவை குறைந்துள்ளது. அத்தகைய சூழலில் விலை குறையாமல் அதிகரிப்பது வினோதம். சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிா்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.