ரயில்வே மைதானங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: எம்பி சு.வெங்கடேசன் 

ரயில்வே மைதானங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

ரயில்வே மைதானங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் மத்திய ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை "ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையத்தின்" வசம் வணிக பயன்பாட்டு நோக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான். இப்பட்டியலில் சென்னை ஐ.சி.எப் விளையாட்டு வளாகமும் உண்டு. ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில் விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது தேச விரோதம் ஆனது. ரயில்வே வாரியத்தின் 18.05.2021 கடிதம் இந்த அபாயத்தை அமலுக்கு கொண்டு வர முனைந்துள்ளது. 

இந்திய ரயில்வே ஒரு விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை கொண்டுள்ளது. இது சர்வதேச விளையாட்டு வீரர்களில் 50 % யையும், பதக்க வீரர்களில் 1/3
பங்கையும் கொண்டிருக்கும் தனிப் பெரும் விளையாட்டு அமைப்பாகும். இந்த வீரர்கள் எல்லாம் கீழ் மட்டப்பணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே.

இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி பயணச்சீட்டு பரிசோதகர் ஆவார். 'தங்கக் கால்களுக்கு' சொந்தக் காரரான பி.டி.உஷா அவர்களும் பயணச்சீட்டு
பரிசோதகர் ஆவார். இவர்கள் எல்லாம் ரயில்வே மைதானங்களில் உள்ள ஆதார வளங்கள், வசதிகளை பயன்படுத்தியே இந்த உயரங்களை எட்டியுள்ளார்கள்.
இந்தியா இதுவரை வென்றுள்ள 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13 ரயில்வே ஊழியர்கள் பெற்றுத் தந்தவை. அது போல அர்ச்சுனா விருது பெற்றவர்களில் பலர்
ரெயில்வே ஊழியர்கள்.

சுசில்குமார் - மல்யுத்தம், பாஸ்கரன்- ஹாக்கி., பி.டி.உஷா - தடகளம், வெள்ளைசாமி- பளு தூக்குதல், ராஜரத்தினம் - கபடி, ஜெகன்நாதன்- மேசைப் பந்து, தமிழ்ச்
செல்வன் - உடற்கட்டு. இவர்கள் எல்லோருமே விளையாட்டுக்கான ஆதார வளங்கள் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களில் சாமானிய மக்களுக்கும்
கிடைத்ததாலேயே முன்னேறி வந்தவர்கள். இல்லையெனில் இவர்களுக்கு இந்த வளங்கள் எங்கே கிடைத்திருக்கும்? என்பது கேள்விக் குறி.

சமூகத்தில் அடித்தள ஆற்றல்களை அடையாளம் காணவும், பயன்படுத்தவும், வளர்க்கவும் இது போன்ற அரசு கட்டமைப்புகள் தேவை. அப்போதுதான் உலக
அளவிலும், தேசிய அளவிலும் கொண்டாடத்தக்க பலர் கிடைப்பார்கள். 

இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல. தேசத்தின் பெருமையைப் பறை சாற்றுகிற ஆற்றல் மிக்க அடித்தள வீரர்களுக்கு வழி அடைக்கிற அபாய
முடிவாகும். விளையாட்டுத் துறையின் விரிவான ஈர்ப்பை சிதைக்கிற செயல் ஆகும். 

ஆகவே இத்தகைய தவறான முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டுமென இன்றைய (10.06.2021) கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். 

விளையாட்டை விபரீதமாக மாற்றாதீர்கள்!
அமைச்சரே தோனிகள் ஆடட்டும்! உஷாக்கள் ஓடட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com