தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பாஜக தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். எனினும், நோய்த்தொற்று அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பாதிப்பு குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என, முதல்வர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 23 மே 2020 அன்று தொற்று பாதிப்பு 759 இறப்பு 103 என்று இருந்த போது டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக இன்றைய முதல்வர் ஆர்பாட்டம் நடத்தினார்.
ஆனால் நேற்று மட்டும் பாதிப்பு 15759 இறப்பு 378 இருக்கும்போது டாஸ்மாக் திறந்திருப்பது எவ்வளவு மோசமான செயல். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.