சசிகலாவுடன் உரையாடினால் ஒழுங்கு நடவடிக்கை: அதிமுக தீர்மானம்

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சசிகலாவுடன் உரையாடினால் ஒழுங்கு நடவடிக்கை: அதிமுக தீர்மானம்


சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, சசிகலாவுடன் உரையாடினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.     

தீர்மானம்:    

"உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர். 
    
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
    
மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்.
    
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த 23.5.2021-ஆம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
    
இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com