கோவை: கோவையில் கரோனா நிவாரணம் 2 ஆம் தவணை, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணியினை உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது தவணையாக ரூ.2 ஆயிரம் பணம், 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு செவ்வாய்க்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை, வடவள்ளி கூத்தாண்டவர் கோயில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆம் தவணை கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணியினை உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆர்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.