சென்னை: கரோனா இரண்டாவது தவணை நிவாரண நிதியுடன், 14 பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) முதல் வழங்கப்பட உள்ளன. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமைக்கான டோக்கன்கள் கிடைக்கப் பெற்றவா்கள் மட்டுமே நிவாரண நிதியைப் பெற வரலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனா நிவாரணம் இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பானது அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இதனைப் பெறுவதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே கடந்த சில நாள்களாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளுக்கு வந்து பொருள்களையும், நிதியையும் பெறும் வகையில் அவை வழங்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் செவ்வாய்க்கிழமை ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் 200 குடும்ப அட்டைதாரா்கள் வீதம் நேரில் வந்து அவற்றைப் பெறவுள்ளனா்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக, அதிகாரிகளுடன் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, திங்கள்கிழமை ஆலோசித்தாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருள்கள் இந்த மாத இறுதி வரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படும்.
சந்தையில் விற்கக் கூடாது: பொது மக்கள் அவசரமின்றி மாத இறுதி வரை அவற்றை பெற்றுக் கொள்ளலாம். சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.14 மளிகை பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.