ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.31 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பினை அமைச்சர் ஆர். காந்தி பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ககரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணையாக ரூ. 2000 வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பு வழங்கல் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ் டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எம். ஜெயச்சந்திரன், ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல். ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் இரவு பகலாக எடுத்த முயற்சியின் காரணமாக தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று குறைந்து சுமார் 54 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது.
அதே போல் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பெற்று 100 நாட்களுக்குள் நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். அத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7500 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இன்று 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேற்கண்ட திட்டங்களின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 93 கோடி 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.