தேர்தல் முன் விரோதம்: வார்டு பெண் உறுப்பினர், கணவர் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு

திருப்புவனத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற வார்டு பெண் உறுப்பினர், அவரது கணவர் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற வார்டு பெண் உறுப்பினர், அவரது கணவர் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி வடகரை பகுதி இரண்டாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் முத்திருளாயி இவருக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் ஒன்றாவது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலிருந்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பாண்டியம்மாள் இவரது மகன் ரவி மற்றும் உறவினர்கள் கும்பலாக முத்திருளாயி வீட்டுக்குச் சென்று அங்கிருந்த முத்திருளாயி மற்றும் அவரது கணவர் ராமலிங்கம், மகன் பரந்தாமன், உறவினர்கள் ராஜலிங்கம், பரமேஸ்வரன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.

இச்சம்பவத்தில் இவர்களுக்கு உடம்பில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற இவர்கள் அனைவரும் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாகி விட்ட பாண்டியம்மாள் அவரது மகன் ரவி மற்றும் உறவினர்களை தேடி வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் எதிரிகளை தேடி வந்த நிலையில் பாண்டியம்மாள் இவரது கணவர் நாகராஜன் மகன் ரவி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com