புதுவை மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன.
இதனிடையே கடந்த ஜூன் 7ஆம் தேதி மீண்டும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அந்தப் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமையோடு நிறைவடைந்ததை அடுத்து, புதுவை அரசு சார்பில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்க கட்டுப்பாடுகள், ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து திங்கள்கிழமை இரவு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி
இதன்படி செவ்வாய்க்கிழமை காலை முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. அரசு உத்தரவின்படி, நாள்தோறும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கமும், நாள்தோறும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற அனைத்து வித கடைகளும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்துக் கடைகளும் புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மாலை 5 மணி வரை புதுச்சேரிக்குள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் புதுச்சேரி அரசு நகர பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன.
வழக்கம்போல் பூங்காக்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு மைதானம், நூலகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், அந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு பெரும்பாலான ஊழியர்கள் வருகை தந்துள்ளனர்.
உணவகங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், நீண்ட நாட்களுக்கு பிறகு உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளதால் அந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
வங்கிகள் ,பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் போன்றவை முழு நேரம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவைகளும் திறக்கப்பட்டு இயங்குகின்றன. இதனால் புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.