தமிழகம் மின்மிகை மாநிலம் என்ற முந்தைய அரசின் கூற்று தவறானது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்படுவது குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பராமரிப்புப் பணிகளை 10 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்பின்பு முன்னறிவிப்பின்றி மின்தடை இருக்காது.
துறையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், மின் கட்டணத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சரியாகக் கட்டணத்தை நிர்ணயிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.
கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக 10 லட்சம் புகார்கள் வந்துள்ளது. புகார்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றார்.