சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தமிழக முதல்வரால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2021 அன்று வழங்கப்படவுள்ளது.
மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை - 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் 30.06.2021 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும், விண்ணப்பப் படிவங்களை https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக முதல்வரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.