காங்கயம் அருகே, சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான 70 ஏக்கர் நிலங்களை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உள்பட்ட சிவியார்பாளையம் கிராமத்தில், சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயிலின் நிர்வாகத்துக்கு உள்பட்ட பரமசிவன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 69.81 ஏக்கர் புன்செய் நிலங்கள் சென்னிமலை சாலைப் பகுதியில், சாவடி முதல் நால்ரோடு கிராமம் வரை உள்ளன.
இந்த நிலங்களை, இப்பகுதியைச் சேர்ந்த 19 நபர்கள், கடந்த 20 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து வந்ததாகத் தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள இந்த நிலங்களை மீட்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2019 ஆண்டு மே மாதம் வந்த தீர்ப்பில், மேற்கண்ட நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதன் பின்னர் இந்த நிலங்களை விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாததால், இந்து சமய அறநிலையத்துறையின் திருப்பூர் இணை ஆணையர் நா.நடராஜன் தலைமையில் திருப்பூர் உதவி ஆணையர் ரெ.சா.வெங்கடேஷ், சென்னிமலை முருகன் கோயில் செயல் அலுவலர் எம்.அருள்குமார் மற்றும் காங்கயம் வருவாய்த்துறையினர் முன்னிலையில், ஆக்கிரமிப்பில் இருந்த 69.81 ஏக்கர் நிலங்கள் நிலஅளவீடு செய்யப்பட்டு, மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட இந்த நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என சென்னிமலை முருகன் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.