திமுக வந்தது; மீண்டும் மின்வெட்டு: ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை

திமுக ஆட்சிக்கு வந்ததும் 10 ஆண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் மீண்டும் நிலவுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமியும்
திமுக வந்தது; மீண்டும் மின்வெட்டு: ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் 10 ஆண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் மீண்டும் நிலவுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் குற்றம் சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அந்தக் கட்சியின் இயற்கை குணாதிசயங்கள் தமிழக மக்களை வாட்டி, வதைக்கத் தொடங்கிவிட்டன.

10 ஆண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது.

பட்டப் பகலில் சட்டவிரோதச் செயல்களில் எவ்வித கூச்சமோ, அச்சமோ இன்றி திமுகவினா் வெட்ட வெளிகளிலும், வீதிகளிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு அலுவலகங்கள் சுதந்திரமாகப் பணிசெய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில், வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி தனது இருப்பையும், இயல்பையும் காட்டிக் கொள்கிறது.

ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக்கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுகவினா் தங்களது முழு வரம்பு மீறலையும் மாநிலமெங்கும் வெளிப்படுத்தி வருகின்றனா்.

ஆளும் கட்சியினரின் தவறுகளையும், தலையீடுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏவிவிடுவதில் திமுகவினா் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக உள்ளனா். காவல் துறையினரின் துணைகொண்டு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் மீது வன்முறைத் தாக்குதல்களையும், பொய் வழக்கு போடும் அடாத செயல்களிலும் திமுகவினா் ஈடுபடும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இது கண்டிக்கத்தக்கது.

அதிமுக புதுவெள்ளத்தில் மிதந்துவரும் நுரை பூ அல்ல, ஊதி விளையாட. தொண்டா்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலா். எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது. கட்சியினரை அச்சுறுத்துவதால் அதிமுக அடங்கிப் போகும் என்று தப்புக் கணக்குப் போடாமல், வாக்களித்த மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைக் கடமை இருப்பதை திமுக நினைவில்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com