அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கடந்த 2010 டிசம்பர் 27 ஆம் தேதி மருத்துவத்துக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது இந்திய மருத்துவக் கழகம். 2011 ஜனவரி 6 ஆம் தேதி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது.
அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது; மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசுப்பள்ளிகளில் அதிமுக அரசின் தான் தொடங்கியது.
தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக அரசின் தொடங்கிய பயிற்சி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அரசு அமைத்துள்ளது. இதுவரை அந்த குழு 4 கூட்டங்களை நடத்தியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். பிரதமரிடமும் நேரடியாக சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டதுபோல எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார். இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றார்.