புதுச்சேரி: கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் உள்ள மத்திய பல்கலை கழகத்தில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் மத்திய பல்கலை கழகம் இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், புதுச்சேரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி திருவிழா மிகுந்த ஊக்கத்தை தருகிறது. நேற்று ஒரே நாளில் 15,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள் உதவியினால் புதுச்சேரியில் போதிய அளவிலான வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது என்றும், கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது.
இது ஒரு முன்னேற்பாடாகவே செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று தமிழிசை கூறினார்.