நடிகை கொடுத்த பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். துணை நடிகை ஒருவருடன் குடும்பம் நடத்திய மணிகண்டன், கருவைக் கலைக்கச் செய்தார் என்றும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, மணிகண்டன் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. இதனால், அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட விவரங்கள் எதுவும் காவல் துறை தரப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.