காஞ்சிபுரம்: சட்டப் பேரவையில் ஆளுநரின் உரை ஏமாற்றமளிப்பதாகவும்,மு.க.ஸ்டாலினின் புகழ் பாடும் உரையாகவே இருப்பதாகவும் பாஜக தலைவர் எல்.முருகன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகேயுள்ள வையாவூரில் உள்ள தனியார் பள்ளியில் முன்களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை பாஜக சார்பில் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சட்டப் பேரவைத் தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் எதுவும் சட்டப் பேரவையில் ஆளுநரின் உரையின் போது இல்லாதது ஏமாற்றத்தையும்,வருத்தத்தையும் தருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் தேர்தலில் வாக்குறுதியாக கொடுத்தது திமுக. பொய்யான வாக்குறுதி கொடுத்து மாணவர்களின் மன உறுதியை தொலைத்திருக்கிறது. தேர்தலின் போது இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்தது, பெட்ரோல்,டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னது, சமையல் எரிவாயுவுக்கு மானியம் தருவதாக கூறியது.. இவை அனைத்தும் திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதிகள்.
ஆனால் இவை எதுவும் சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இல்லாதது ஏமாற்றத்தையே தருகிறது. மு.க.ஸ்டாலின் புகழ்பாடும் உரையாகவே ஆளுநரின் உரை இருந்தது.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறது.
தற்போது இருக்கும் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.
பேட்டியின் போது பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, நகர் பொதுச் செயலாளர் வி.ஜீவானந்தம் ஆகியோர் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.