கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் அள்ளப்படாத வெங்காயத் தாமரையால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகள் அள்ளப்படாமல் குவிந்துள்ளதால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெண்ணாற்றில் தேங்கியுள்ள வெங்காயத் தாமரைகள், கழிவுகள்
வெண்ணாற்றில் தேங்கியுள்ள வெங்காயத் தாமரைகள், கழிவுகள்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகள் அள்ளப்படாமல் குவிந்துள்ளதால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயத் தாமரையை உடனே அகற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமிணியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று கிளை ஆறுகளாகப் பிரிகிறது. தொடர்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி கிராமம் வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனப் பிரிகிறது.

அதைத் தொடர்ந்து, அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில் வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது. இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாகச் சென்று அரிச்சந்திரா நதியில் கலந்து விடுகிறது.

வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாகப் பிரிந்து செல்கிறது. மேலும், பல கிளை வாய்க்கால்களுமாகப் பிரிந்து பாசனத்திற்குச் செல்லும் படியாக உள்ளன. இந்நிலையில் வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகள் மண்டி மேற்கொண்டு தண்ணீர் செல்ல வழியில்லாமல் தடுத்த நிலையில் உள்ளன.

கூத்தாநல்லூருக்கு இருக்கும் ஒரே ஆறு, இந்த வெண்ணாறுதான். வெண்ணாற்றில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டபடி, ஆறுகள் தூர்வாரப்பட்டு, ஆற்றின் ஓரங்களில் வளர்ந்திருந்த தேவையற்ற மரங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, இரண்டு பக்க கரைகளும் உயர்த்தப்பட்டன. பாசனத்திற்கு தண்ணீர் செல்லக் கூடிய சில கிளை, வாய்க்கால்களில் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு, வாய்க்கால்களில் கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஆற்றை நோக்கி வருகின்றன. 

எனினும் ஆற்றுத் தண்ணீரில் மிதந்து வந்துள்ள குப்பைகள், ஏற்கெனவே மண்டிக் கிடந்த வெங்காயத் தாமரைச் செடிகள், தேவையற்ற கழிவுகள் என அனைத்தும் கூத்தாநல்லூரில், வெட்சுமாங்குடிப் பாலத்தருகேயும் , பாய்க்காரப் பாலத்தின் கீழேயும் தேங்கி நிற்கின்றது. ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு வாரமாகிறது. இன்னும் வெங்காயத் தாமரைகள் அகற்றப்படவில்லை. ஆற்றுத் தண்ணீர் மேற்கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெண்ணாற்றிலிருந்து பாசனத்திற்கு கொஞ்ச நஞ்சம் செல்லக்கூடிய தண்ணீரும் இப்போது செல்ல முடியவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று நோய் பெரும் அல்லல் படுத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வெண்ணாற்றில் மண்டிக் கிடக்கும் கழிவுகளால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் வந்து பார்வையிட்டு, வெண்ணாற்றில் மண்டிக் கிடக்கும் வெங்காயத் தாமரைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com