தமிழகத்தில் மேலும் இருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உருமாறிய கரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான 'டெல்டா பிளஸ்' வகை கரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கரோனா வைரஸில் இருந்து உருமாறிய 'டெல்டா' கரோனா வைரஸின் உருமாறிய வடிவம் ஆகும்.
இதில் தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' வகை கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 1,100க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் மேலும் இருவருக்கு 'டெல்டா பிளஸ்' தொற்று உறுதி ஆகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்தம் 3 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு ஆய்வகத்துக்குமாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் வரத் தாமதமாவதால் விரைவில் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.