சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அதன்பிறகு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் மருத்துவக் குழுவினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.