'கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'

'கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
'கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'

'கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமை என்றாலும், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை தமிழகத்திலுள்ள அனைவரும் பெற்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. இதனை உணர்ந்து, தற்போது தலைவிரித்து ஆடும் கரோனா தொற்று நோயினை முற்றிலும் ஒழிக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. 
இந்தச் சூழ்நிலையில், இதுவரை பரவிய உருமாறிய கரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாகவும் இப்போது, கரோனா பரவல் குறைந்துள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் டெல்டா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், எனவே, மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதுமட்டுமல்லாமல், தற்போது டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கரோனா வைரஸ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், மேற்காணும் மூன்று மாவட்டங்களில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும், கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இன்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 
இந்தச் சூழ்நிலையில், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்ற கட்டுப்பாடுகள் தற்போது முழுமயாக பின்பற்றப்படுவதில்லை என்றும், டாஸ்மாக் கடைகளில் மதுவகைகளை வாங்க வருவோரும், கடை ஊழியர்களும் முகக்கவசம் அணியாமல் இருப்பதாகவும், இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இதைப் பார்க்கும்போது வருமானத்தில் அரசு குறியாக இருக்கின்றதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. வருமானத்திற்காக கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படுவதை அரசு வேடிக்கைப் பார்த்தால், வருமானத்தைவிட பல மடங்கு செலவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். 
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துதல் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இது மூன்றாவது அலையை முற்றிலும் தவிர்க்க உதவும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவவாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com