சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினருக்கு இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகளை அனுப்பியுள்ளனர்.
நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. ராஜன், 86,342 பேர் நீட் தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து சிலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளும் நன்கு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஒரு மாதத்துக்குள் ஆய்வை முடிக்க முயற்சிக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. 4-ஆம் கட்ட ஆலோசனை ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.