'கரோனாவால் பெற்றோர்களை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்'

கரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
'கரோனாவால் பெற்றோர்களை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்'

கரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி வழங்குவதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றிருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சில நிவாரண உதவிகளை முதல்வர் 29-5-2021 அன்று அறிவித்தார்கள். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத் துறையால் வெளியிடப்பட்டுள்ள ஆணையையும், அதன் வழிகாட்டு நெறிமுறைகளையும் பார்த்தால், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற பழமொழியைத்தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

29-5-2021 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வட்டியோடு வழங்கிடவும்,அவர்களுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கவும், பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் தங்காத குழந்தைகளுக்கு பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் 18 வயது வரையில் வழங்கப்படும் என்றும், இதுகுறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், சமூக நலத் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாராவது ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தின் பொருளீட்டும் நபராக இருக்கும்பட்சத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பட்டியலில் அவர் பெயர் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாத பட்சத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பட்டியலில் அவர் சேர்க்கப்பட தகுதியுள்ளவரா என்று ஆராய்ந்து அதன் பின் அவர் பெயர் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, இறந்த தாய், தந்தை இருவருமோ அல்லது இறந்த தாயோ அல்லது தந்தையோ அரசாங்கத்திலோ அல்லது பொதுத் துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்திருந்தால், அவர்களின் குழந்தைகள் நிவாரணத் தொகை பெற தகுதியானவர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழிகாட்டி நெறிமுறைகள் பயனாளிகளை குறைப்பதற்கான வழி என்றே மக்கள் கருதுகிறார்கள். மேலும், குடும்பத்தில் உள்ள பொருளீட்டும் நபரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை உருவாக்குவதாக அமையும். மேலும், இந்த நிவாரண உதவி என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்று என்பதால், இதில் பெற்றோரின் வேலைவாய்ப்பினை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்காது.

எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஆதரவற்ற குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தாமல், பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com