தமிழகத்துக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்துள்ளன.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். இந்நிலையில், புணேவிலிருந்து மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்று வந்தன.
சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகளை நடைபெற்று வருகிறது.