நிகழாண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று புதுச்சேரி அதிமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அ. அன்பழகன் செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதைவிட்டு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கும் மற்றும் அரசியலமைப்பிற்கும் எதிராக செயல்பட முயற்சிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.
தற்போது மத்திய அரசு என்றுள்ளதை, ஒன்றிய அரசு என அழைத்து அரசியலமைப்புச் சட்டத்தையே கேலி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை திமுக சீர்குலைக்கச் செய்கிறது.
புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதிவியேற்பில் துணைநிலை ஆளுநரால் வாசிக்கப்பட்ட உறுதிமொழியை தவறாக சித்தரித்து, தனது தவறுக்கு வலுசேர்க்க திமுக முயற்சிக்கிறது.
மத்தி ஒன்றிய ஆட்சி பரப்புக்கு உட்பட்ட புதுச்சேரியின் அமைச்சராக பதவியேற்றுள்ள என்ற வாசகத்தை தனக்கு வசதியாக திரித்து தனது தவறை நியாயப்படுத்த திமுக முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆட்சிப்பரப்பில் கிராம ஆட்சி, உள்ளாட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி உள்ளன. அதைக்கூட புரிந்து கொள்ளாமல் மத்திய ஆட்சியை ஒன்றிய ஆட்சி என குறிப்பிடுவது தவறு என்பதை திமுக புரிந்து கொள்ளவேண்டும்.
ஆட்சி பரப்பிற்கும், அரசின் பெயருக்கும் வித்தியாசம் கூட தெரியாமல் திமுக உலறுகிறது. திமுகவின் இந்த தவறான கருத்தை மத்திய அரசு உரிய விதத்தில் தடுத்து நிறுத்தவேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மக்களை குழப்பி வருகிறது. இதனால் இந்தாண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வு நடக்குமா? இல்லையா? என தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.