தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்த சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பெரியார் சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு பெரியார் உருவச் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர், காவித் துண்டு அணிவித்ததோடு, தலைக்கு தொப்பியும் அணிவித்திருந்தனர்.
இது குறித்து கண்டனம் தெரிவித்து கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் அமைந்துள்ள, தந்தை பெரியார் சிலைக்கு மதவெறி சக்திகள் காவித் துண்டு போர்த்தி இழிவுபடுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தன் வாழ்நாள் முழுவதும் எந்த வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினாரோ, அதே சக்திகள் இன்றைக்கு காவித் துண்டைப் போர்த்தி களங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் எந்த கொள்கைகளுக்காக வாழ்ந்தாரோ, அந்த கொள்கைகள் பீடுநடை போடும் பூமியாக தமிழகம் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிற்போக்கு எண்ணம் கொண்ட வகுப்புவாத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.