கம்பம்: கேரளத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதால் தேனி தோட்டத் தொழிலாளர்கள் அந்த மாநிலத்துக்கு வேலைக்குச் செல்லவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளத்தில் உள்ள
வர்த்தகர்கள் கூட்டமைப்பான சம்யுக்தா சமர சமிதி மற்றும் தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு ஏராளமான அமைப்புகள் ஆதரவளித்தனர்.
இதனால் கேரள மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. போராட்டத்தில் மாநில அரசுப் போக்குவரத்தும் பங்கேற்றதால் வாகனங்களின்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தின் அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியில் குமுளி, வண்டிப்பெரியாறு, பீர்மேடு, கட்டப்பனை, புளியமலை, நெடுங்கண்டம், கம்பமெட்டு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.
இதன் காரணமாக, கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கேரளத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான, ஆண், பெண் தோட்டத் தொழிலாளர்கள் கேரளத்துக்கு வேலைக்குச் செல்லவில்லை.
சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியும் வெறிச்சோடி காணப்பட்டது.