தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (19). இவர் திங்கள்கிழமை இரவு மருத்துவக் கல்லூரிப் பகுதியிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ரெட்டிப்பாளையம் சாலையில் சென்ற இவரை 5 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில், பலத்தக் காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவரது தலை துண்டிக்கப்பட்டு அருகே உள்ள கன்னியம்மன் கோயில் முன்புறமும், உடல் அருகில் உள்ள தண்டவாளத்திலும் வீசப்பட்டுக் கிடந்தது.
தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மணிகண்டனுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த முத்துராமனுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக மணிகண்டன் மீது மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.
இதன் அடிப்படையில் முத்துராமன் உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.