ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் குண்டம் விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மதியம் வரை குண்டம் இறங்குவது வழக்கம்.
இந்தாண்டு கரோனா நோய்ப்பரவலை முன்னிட்டு குறைவான பக்தர்களே குண்டம் இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு குண்டம் விழா நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. குண்டம் விழாவில் வழக்கம்போல் அனைத்துப் பக்தர்களையும் இறங்க அனுமதித்திட வேண்டும் என்று பக்தர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கணபதி பூஜையுடன் தொடங்கிய குண்டம் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் கொண்டத்து காளியம்மனுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். குண்டம் இறங்குவதற்கு காப்புக்கட்டி விரதமிருந்த கோவில் பூசாரிகள், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் சிலருக்கு மட்டும் குண்டம் இறங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்றிரவு பற்ற வைக்கப்பட்ட குண்டமேடை இரவு குண்டம் இறங்கிடும் வகையில் தயார் செய்யப்பட்டு இன்று அதிகாலை குண்டத்திற்கு சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தலைமைப்பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவில் பூசாரிகள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் சிலர் என குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். வழக்கமாக அதிகாலை முதல் மதியம் வரை நடைபெறும் குண்டம் நிகழ்ச்சி இந்தாண்டு சில மணி நேரத்திற்குள் முடிவடைந்தது.