
மண்பாண்டப் பொருள்களால் வடிவமைத்து வைத்திருந்த வாக்களிப்பு விழிப்புணர்வு வாசகங்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முதலாவதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தகவல் மையத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ பள்ளியில் புதிய இளம் வாக்காளர்களை வைத்து மரம் நடப்பட்டது. அப்போது அனைவரும் அச்சமின்றி வாக்களிப்போம் என மணி அடித்து புதிய வாக்களர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து குலாலர் தெருவில் மண்பாண்ட உற்பத்தியாளர்கள் மண்பாண்டப் பொருள்களால் வடிவமைத்து வைத்திருந்த 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.
பின் நடமாடும் வாக்காளர் சேவை மையத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மானாமதுரை வட்டாட்சியர் இரா.மாணிக்கவாசகம், இளையான்குடி வட்டாட்சியர் சி.ஆனந்த், மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.