தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும். கடந்த 12 ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு இலட்சியப் பாதைகளைச் சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தைத் தொடர்கிறது.
வரவிருக்கும் தேர்தலில் எந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை. ஆட்சியில் அமரும் மனிதர் ஒருவேளை மாறக் கூடும். ஆனால் நெறி சார்ந்த நல்லரசியல் வாய்ப்பதற்கு வழியில்லை. அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.