வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக வழங்கப்படும் பூத் சீட்டுகளுக்கு மாற்றாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாக்காளர் தகவல் சீட்டானது தேர்தலுக்கு 5 நாள்கள் முன்னதாகவே வழங்கப்படும் எனவும், இதில் வாக்காளர்களின் புகைப்படம் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளரின் பெயர், வாக்குச்சாவடி எண், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.