பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில், முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்பு அறிவிப்புகளாக இதனை அவர் அறிவித்தார்.
மற்ற விரிவான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றும், அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அறிவித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி கே. பழனிசாமி, "தேர்தல் அறிக்கை ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. எப்படியோ தகவல் கசிந்துவிடுகிறது. எனவே, அவர்களைப் பார்த்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்ற செய்தி தவறானது" என்றார்.
இதுதவிர மகளிருக்கான திட்டமாக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.