சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதனிடையே, அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி. ரவி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.