புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், முதற்கட்டமாக பாஜக - என்ஆர் காங்கிரஸ் இடையே தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திட்டனர்.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனியார் உணவகத்தில் இக்கூட்டணி உறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டது.
இதன்படி புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜக 14 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்கட்டமாக என் ஆர் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தமாகி உள்ளது. இதில் என் ஆர் காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக அதிமுகவுடன் தொகுதி பங்கீடு நடைபெற்று பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதியிலிருந்து அதிமுகவுக்கு பிரித்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்து உள்ளதாகவும், கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ரங்கசாமி மற்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.