தேர்தல் கூட்டணி: அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை?

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்த தேமுதிக, தற்போது தேர்தல் கூட்டணி குறித்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்
தேர்தல் கூட்டணி: அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை?
தேர்தல் கூட்டணி: அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை?

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்த தேமுதிக, தற்போது தேர்தல் கூட்டணி குறித்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன், தேர்தல் பொறுப்பாளர் மாணிக்க ராஜாவுடன் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பார்த்தசாரதி இளங்கோவன் ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு, அமமுக பொதுச் செயலாளர் தினகரனுடன்,  தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தொலைபேசி வாயிலாக பேசியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்காக அதிமுகவுடன் தேமுதிக பல கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. தேமுதிக முதலில் 41 தொகுதிகளைக் கேட்கத் தொடங்கி, பிறகு குறைத்துக்கொண்டே வந்தது.

ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த அளவிற்கேனும் தங்களுக்கும் தர வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியது. அதை அதிமுக தர மறுத்து வந்தது.

இதற்கிடையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போதும் தேமுதிக 23 தொகுதிகள் வரையும் தர வேண்டும் என்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.

அதற்கு அதிமுக சம்மதிக்கவில்லை. 13 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் மட்டும் தரப்படும் என்று உறுதியாகக் கூறிவிட்டது. இதனை ஏற்காமல் கூட்டணியைப் பரிசீலனை செய்வதற்காக தேமுதிகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்தாா். பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டம் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே தேமுதிகவை அதிமுக அவமதித்து வருகிறது. அதனால், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். தனித்தே கூட போட்டியிடுவோம் என்று கூறினா். இதனையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை விஜயகாந்த் எடுத்தாா்.

அது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவுடன் தொடா்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. தேமுதிக சாா்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மாவட்டச் செயலாளா்களின் ஒட்டுமொத்த கருத்தின் அடிப்படையில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com